உலக செய்திகள்

உக்ரைன் போரில் ரஷியாவுக்கே முழு ஆதரவு : மீண்டும் உறுதி செய்த வடகொரியா

உக்ரைன் மீது ரஷியா நடத்தும் போருக்கு வட கொரியா மீண்டும் தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது.

உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷியா, அந்த நாட்டின் மீது கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. இருநாடுகளுக்கும் இடையேயான போர் 4 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா எடுத்த முயற்சிகளுக்கு இதுவரை பலன் கிடைத்தபாடில்லை. இதனால் போர் எப்போது முடியும் என்றே தெரியாமல் நீடித்துக்கொண்டே செல்கிறது.

இதற்கிடையே, உக்ரைன் மீது ரஷியா நடத்தும் போருக்கு வட கொரியா மீண்டும் தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது. ரஷியாவிற்கு ஏவுகணைகள், வெடிபொருட்கள், ராணுவ உதவிகள் போன்றவற்றை வட கொரியா வழங்கியுள்ளது.

இதற்கு பதிலாக, வட கொரியாவிற்கு ராணுவ தொழில்நுட்பங்கள், உணவு, எரிசக்தி போன்ற உதவிகளை ரஷியா வழங்கி வருவதாக கூறப்படுகிறது. அண்மையில், ரஷியாவின் உயர்மட்ட அதிகாரிகள் பலர் வட கொரியாவிற்கு பயணம் மேற்கொண்டதும், ரஷிய பாதுகாப்புத் துறை மந்திரி ஆண்ட்ரே பெலூசாவ் வட கொரிய அதிபரை நேற்று சந்தித்ததும் இதனை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.