உலக செய்திகள்

ஜெர்மனி: சீக்கிய குருத்வாராவில் கோஷ்டி மோதல்; ஆயுதங்களை கொண்டு தாக்குதல் - 11 பேர் காயம்

போலீசார் விசாரணை நடத்தி இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

மோயர்ஸ்

ஜெர்மனி நாட்டின் துயிஸ்பர்க் நகரருகே மோயர்ஸ் என்ற இடத்தில் சீக்கிய குருத்வாரா ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், 2 கோஷ்டிகள் குருத்வாராவில் பயங்கர ஆயுதங்களை கொண்டு மோதி கொண்டன.

இதில், 11 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பான வீடியோ ஒன்றும் வைரலாக பரவியது. அதில் சிலர் கத்திகள் போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி உள்ளனர். துப்பாக்கி சூடும் நடந்துள்ளது. இந்த வன்முறை சம்பவம் பரவியதும், குருத்வாராவில் வழிபட வந்த பலரும் பாதுகாப்பு தேடி அலறியடித்து ஓடினர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். எனினும், இந்த வன்முறை எப்படி உருவானது? என்றும் இதற்கு யார் பொறுப்பு என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், குருத்வாரா நிர்வாக கமிட்டியை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, செல்வாக்கு செலுத்துவது மற்றும் நிதி சார்ந்த விசயங்கள் இந்த வன்முறைக்கான காரணிகளாக இருக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.