கோப்புப்படம் 
உலக செய்திகள்

நைஜீரியாவில் பயங்கரம்: துப்பாக்கி முனையில் 21 பண்ணை தொழிலாளர்கள் கடத்தல்

நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 21 பண்ணை தொழிலாளர்கள் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அபுஜா,

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று, நைஜீரியா. அதன் வட பகுதியில் உள்ள கட்சினா மாகாணத்தில் கம்பானி மயிலாபியா என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் உள்ள பண்ணையில் நேற்று முன்தினம் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கி ஏந்திய கும்பலினர் திபுதிபுவென வந்தனர். வந்த வேகத்தில் அந்த பண்ணையை ஆக்கிரமித்து, அதில் வேலை செய்து கொண்டிருந்த 21 தொழிலாளர்களை கடத்திச்சென்றுவிட்டனர். அவர்களை எங்கே கொண்டு சென்றனர் என்பது குறித்து எந்தவொரு தகவலும் இல்லை. இது அந்த பண்ணைத் தொழிலாளர்கள் குடும்பங்களை பதைபதைக்க வைத்துள்ளது.

இதுபற்றி மாகாண போலீஸ் செய்தி தொடர்பாளர் காம்போ ஈசா கூறுகையில், "15 முதல் 19 வயது வரையிலான பண்ணைத் தொழிலாளர்கள் 21 பேர் கத்திமுனையில் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் ஆவார்கள். 4 பேர் மட்டுமே ஆண்கள். கடத்திய நபர்கள் ஏற்கனவே தொழிலாளர்களின் குடும்பங்களை தொடர்பு கொண்டு பணம் கேட்டுள்ளனர்" என தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி பண்ணை அதிபரிடம், அறுவடை பணிகள் பிரச்சினையின்றி நடைபெற வேண்டுமானால் பாதுகாப்பு பணம் தர வேண்டும் என்று பண்ணை நிர்வாகியிடம் அவர்கள் பேரம் பேசி உள்ளனர். இந்த சம்பவம் நைஜீரியாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT