டெல்லி,
டெல்லியில் ஜிம் பயிற்சியாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியின் அயா நகர் அருகே பதேபூர் பேரியில் உள்ள ஹன்சா சவுக் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் குமார். இவர் அப்பகுதியில் உள்ள ஜிம்மில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், விஜய் குமார் இன்று காலை ஜிம்மிற்கு வெளியே நின்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு பைக்கில் வந்த 2 பேர் தாங்கள் கொண்டு வந்த துப்பாக்கியால் விஜய் மீது சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் விஜய் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த விரைந்து சென்ற போலீசார், விஜய்-யின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற 2 பேரை தேடி வருகின்றனர். அதேவேளை, முன்பகை காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.