ரியாத்,
சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
2026-ஆம் ஆண்டிற்கான ஹஜ் பயணம், மதீனாவில் அளிக்கப்பட்ட ஒரு அன்பான மற்றும் நெகிழ்ச்சியான வரவேற்புடன் தொடங்குகிறது
இந்திய ஹஜ் பயணிகள் குழுவின் முதல் அணியினர், மதீனா விமான நிலையத்தில் இந்திய தூதர் டாக்டர் சுஹேல் அஜாஸ் கான் மற்றும் இந்திய துணை தூதர் ஜெட்டா திரு. பகத் சூரி ஆகியோரால் வரவேற்கப்பட்டனர். இவர்களுடன், ஹஜ் அமைச்சகத்தின் துணை மந்திரிகளான பேராசிரியர் அப்துல்அஜிஸ் ஏ. வாசான் மற்றும் பொறியாளர் அயாத் அப்துல் ரஹ்மான் ரஹ்பினி ஆகியோரும், சவுதி அரசின் பிற உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர்.
இந்திய தூதர் அவர்கள் மதீனா விமான நிலையத்தில் உள்ள வசதிகளை ஆய்வு செய்ததுடன், ஹஜ் பயணிகளுக்கு உதவிக்கரம் நீட்டி வரும் இந்திய சமூக தன்னார்வலர்களையும் சந்தித்து பேசினார்.
இந்திய ஹஜ் பயணிகள் அனைவருக்கும், எவ்வித இடையூறுமின்றி, பாதுகாப்பான மற்றும் ஆன்மீக ரீதியாக செழுமைமிக்க ஒரு ஹஜ் அனுபவம் அமையுமாறு இந்திய தூதரகம் வாழ்த்துகிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.