உலக செய்திகள்

காசாவில் ஹமாஸ் தகவல் தொடர்பு பிரிவு தளபதி படுகொலை; இஸ்ரேல் அறிவிப்பு

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே, ஹமாஸ் ராணுவ கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளது.

டெல் அவிவ்

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக காசா நகர் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த அமைப்பின் முக்கிய தலைவர்களை தாக்கி அழித்து வருகிறது. இருதரப்புக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

எனினும், அந்த அமைப்பு அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது என கூறி அவர்களுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த சூழலில், காசா சிட்டி பகுதியில் ஹமாஸ் அமைப்பின் தகவல் தொடர்பு பிரிவு தளபதியாக செயல்பட்டு வந்த அகமது அபு தீரா என்பவரை இஸ்ரேல் பாதுகாப்பு படை தாக்கி அழித்துள்ளது.

இதுபற்றி இஸ்ரேல் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கு எதிராக முக்கிய பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதில் அவருக்கு தொடர்பு உள்ளது. படையினருக்கு நேரடியான அச்சுறுத்தலாக இருந்தவர் என தெரிவித்து உள்ளது.

இதேபோன்று, காசா சிட்டி பகுதியில் செயல்பட்டு வந்த இஸ்லாம் ஹிஷாம் ரியாத் கனிடா மற்றும் மஹ்மூத் ஹமீது யூசப் ஹம்தவுனா ஆகிய இருவரை இஸ்ரேல் படை படுகொலை செய்துள்ளது. அவர்கள் இருவரும், போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே, ஹமாஸ் ராணுவ கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளது.