உலக செய்திகள்

காசா முனை நிர்வாகத்தை கலைப்பதாக ஹமாஸ் அறிவிப்பு

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்

காசா சிட்டி,

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டது.

73 ஆயிரம் பேர் பலி

அதேவேளை, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர், பொதுமக்கள் என 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஒப்பந்தம்

பின்னர், அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்பட பல்வேறு நாடுகள் மேற்கொண்ட முயற்சியால் இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.

ஒப்பந்தப்படி பணய கைதிகள் ஒப்படைப்பு, ஹமாஸ் ஆயுதக்குழு ஆயுதங்களை கைவிட வேண்டும், காசா நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும். காசா நிர்வாகத்தை ஐ.நா. ஆதரவு பெற்ற பாலஸ்தீன குழு நிர்வகிக்கும், காசாவில் இருந்து இஸ்ரேல் படையினர் வெளியேற வேண்டும் உள்பட பல்வேறு நிபந்தனைகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இரு தரப்பும் இந்த ஒப்பந்தத்தை மெல்ல அமல்படுத்தி வருகின்றன.

ஹமாஸ் அறிவிப்பு

இந்நிலையில், காசா முனை நிர்வாகத்தை கலைப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. காசா முனை தலைமை நிர்வாகி முகமது அல் பரா தனது பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும், காசா நிர்வாக பொறுப்பை ஐநா ஆதரவுபெற்ற அலி ஷாகித் தலைமையிலான தேசிய காசா முனை நிர்வாக குழுவுக்கு வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும், நிர்வாகம் கலைக்கப்பட்டபோதும் காசா முனையை நிர்வகிக்கும் ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என தெரிவித்துள்ளது.

அதேவேளை, காசா முனை நிர்வாகத்தை கலைப்பதாக அறிவித்தபோது ஒப்பந்தத்தின் முதன்மை அம்சமாக திகழும் ஆயுதங்களை கைவிடுவது குறித்து ஹமாஸ் ஆயுதக்குழு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹமாசின் இந்த அறிவிப்பு எந்தவித அர்த்தமும் இல்லாத அறிவிப்பு என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.