உலக செய்திகள்

ஆயுதங்களை ஒப்படைக்கிறது ஹமாஸ்: அமெரிக்க அதிபர் டிரம்ப் முக்கிய அறிவிப்பு

ஹமாஸ் அமைப்பு தங்களின் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை 'காசா அமைதி வாரியம்' எட்டி உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பு தங்களின் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை 'காசா அமைதி வாரியம்' எட்டி உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஆயுத ஒப்படைப்புக்குப் பின் இஸ்ரேலியப் படைகள் வெளியேறும், சர்வதேசப் படையும் புதிய பாலஸ்தீனக் காவல்துறையும் காசாவின் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்கும் என்றும் அறிவித்துள்ளார். காசா பகுதியில் நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஹமாஸ் அமைப்பு படிப்படியாக தனது ஆயுதங்களை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் அமைதிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இடைக்கால நிர்வாகம்

எகிப்து தலைநகர் கெய்ரோவில் அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகளின் மத்தியஸ்தத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் இந்த வரைவு ஒப்பந்தம் உருவானதாக கூறப்படுகிறது. அதன்படி, ஹமாஸ் தனது ஆயுதங்களை படிப்படியாக ஒப்படைப்பதுடன், காசா நிர்வாகம் புதிய பாலஸ்தீன இடைக்கால நிர்வாகத்திடம் மாற்றப்படும் திட்டமும் இடம்பெற்றுள்ளது. இதனுடன், இஸ்ரேல் படைகள் படிப்படியாக காசாவிலிருந்து வெளியேறவும், சர்வதேச அமைதிப்படை பாதுகாப்புப் பொறுப்பை ஏற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் அமைதி

இருப்பினும், இந்த ஒப்பந்தம் இன்னும் முழுமையாக இறுதி செய்யப்படவில்லை. இஸ்ரேல் தனது படைகளை முழுமையாக வாபஸ் பெறும் உறுதியை அளித்த பிறகே ஆயுத ஒப்படைப்பு நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது. மறுபுறம், ஹமாஸ் உண்மையில் ஆயுதங்களை ஒப்படைக்குமா என்பது குறித்து இஸ்ரேல் தரப்பில் சந்தேகம் நிலவி வருகிறது. இதனால், டிரம்ப் அறிவித்துள்ள ஒப்பந்தம் மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தும் முக்கிய முயற்சியாக பார்க்கப்பட்டாலும், அதன் முழுமையான அமலாக்கம் இரு தரப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும் என சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.