உலக செய்திகள்

ஓய்வை அறிவித்தாரா 'தி பீஸ்ட்' பிராக் லெஸ்னர்? - வைரலாகும் வீடியோ

பிராக் லெஸ்னர் தனது ஓய்வை அறிவித்திருப்பது ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லாஸ் வேகாஸ்,

WWE ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு இரவாக ரெஸில்மேனியா 42 மாறியுள்ளது. 24 ஆண்டுகாலமாக மல்யுத்த உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த 'தி பீஸ்ட்' பிராக் லெஸ்னர், தனது ஓய்வை சூசகமாக அறிவித்திருப்பது ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரெஸில்மேனியா நைட் 2-ன் தொடக்க ஆட்டத்தில், நைஜீரியாவின் ஓபா பெமியை (Oba Femi) லெஸ்னர் எதிர்கொண்டார். 5 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் நடந்த இந்தப் போட்டியில், ஓபா பெமியின் அதீத பலத்திற்கு முன்னால் லெஸ்னர் நிலைகுலைந்தார். இறுதியில் ஓபா பெமி வெற்றி பெற்றார்.

போட்டி முடிந்த பிறகு லெஸ்னர் செய்த காரியம் அங்கிருந்த அனைவரையும் கண்ணீர் விட வைத்தது. மல்யுத்த உலகில் ஒரு வீரர் தனது போட்டி உடைகளை (Boots & Gloves) ரிங்கிற்குள் விட்டுச் சென்றால், அது அதிகாரப்பூர்வ ஓய்வைக் குறிக்கும். லெஸ்னர் அப்படியே செய்தார்.

தனது நீண்ட கால ஆலோசகர் பால் ஹேமனை கட்டிப்பிடித்து அழுத லெஸ்னர், ரசிகர்களுக்கு நன்றி கூறி விடைபெற்றார். அரங்கம் முழுவதும் ரசிகர்கள் "தேங்க்யூ பிராக்" என்று முழக்கமிட்டு அவருக்கு மரியாதை செலுத்தினர்.

லெஸ்னரின் இந்தச் செயல் 100 சதவிகிதம் உண்மையான ஓய்வு என்று ஒரு தரப்பு கூறினாலும், WWE வட்டாரத்தில் சில சந்தேகங்களும் எழுந்துள்ளன. 2026 சம்மர்ஸ்லாம் லெஸ்னரின் சொந்த ஊரான மினசோட்டாவில் நடைபெற உள்ளது. அங்கு கின்தர் (GUNTHER) உடன் ஒரு இறுதிப் போட்டியில் பங்கேற்க லெஸ்னர் மீண்டும் வரலாம் எனத் தெரிகிறது.