உலக செய்திகள்

சீனாவில் கனமழை, வெள்ளப்பெருக்கு; 21 பேர் பலி

தென்மேற்கே குவாங்சி பகுதியில் பண்ணை தொழிலாளர்களுடன் சென்ற லாரி ஒன்று ஆற்று வெள்ளத்தில் சிக்கி, அடித்து செல்லப்பட்டதில் 10 பேர் பலியாகி உள்ளனர்.

ஹுனான்

சீனாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து, அதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு மாகாணங்களும் நீரில் மூழ்கி காணப்படுகின்றன. இதில், ஹுபெய் மற்றும் ஹுனான் மாகாணங்களின் சில பகுதிகளில் பள்ளிகள், வணிக கடைகள் மற்றும் போக்குவரத்து சேவை உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டு உள்ளன.

கனமழையால், நிலச்சரிவுகளும் மற்றும் வெள்ளமும் ஏற்பட்டதில் சிக்கி தென்மேற்கு குயிஜவ் மாகாணத்தில் 4 பேரும், தெற்கு ஹுனான் மாகாணத்தில் 4 பேரும், மத்திய ஹுபெய் மாகாணத்தில் உள்ள தாழ்வான கிராமத்தில் 3 பேரும் பலியாகி உள்ளனர். பலரை காணவில்லை.

இதுதவிர, தென்மேற்கே குவாங்சி பகுதியில் பண்ணை தொழிலாளர்களுடன் சென்ற லாரி ஒன்று ஆற்று வெள்ளத்தில் சிக்கி, அடித்து செல்லப்பட்டது. இதில் 10 பேர் பலியாகி உள்ளனர். வீடுகள், வர்த்தக கட்டிடங்களை சுற்றி மழைநீர் தேங்கி காணப்படுகிறது. சாலைகள் நீரில் மூழ்கி விட்டன. சில கார்களும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

போக்குவரத்து மற்றும் மின் விநியோகமும் பாதிக்கப்பட்டு உள்ளது. சீனாவில் கனமழையால், ஆயிரம் கி.மீ.க்கும் கூடுதலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து, 2.2 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு பேரிடர் நிவாரண நிதியை அரசு ஒதுக்கி உள்ளது.