உலக செய்திகள்

வெல்ல முடியாத ஒரு போரில் ஹிஸ்புல்லா அமைப்பு நுழைந்துள்ளது: இஸ்ரேல் பாதுகாப்பு படை

ஈரானுக்கு எதிரான நடவடிக்கைக்கு தயாராகும்போதே, ஹிஸ்புல்லாவிடம் இருந்து தாக்குதல் வரும் என்பதற்காக முன்பே தயாராக இருந்தோம் என்றார்.

டெல் அவிவ்

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக நேற்று முன்தினம் கடுமையாக தாக்கியது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது. இந்த தொடக்க கட்ட தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட மூத்த ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டு விட்டனர் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.

இந்த சூழலில், இஸ்ரேல் பாதுகாப்பு படை இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், வெல்ல முடியாத ஒரு போரில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு நுழைந்துள்ளது என தெரிவித்து உள்ளது. அதன் சர்வதேச செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் நதாவ் ஷோஷானி வீடியோ மூலம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ஹிஸ்புல்லா கட்டுப்பாட்டு மையங்கள், ஏவுதளங்கள் மற்றும் மூத்த அதிகாரிகளின் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளை இலக்காக கொண்டு இஸ்ரேல் ராணுவம் தாக்கியது.

லெபனானில் உள்ள பல்வேறு ஹிஸ்புல்லா இலக்குகளை குறி வைத்து பதிலடி தாக்குதல்களை இஸ்ரேல் பாதுகாப்பு படை நடத்தியது. இதற்கு நாங்கள் தயாராகவே இருந்தோம். ஏனெனில் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைக்கு தயாராகும்போதே, அதன் ஒரு பகுதியாக ஹிஸ்புல்லாவிடம் இருந்து தாக்குதல் வரும் என்பதற்காக முன்பே தயாராக இருந்தோம். அதனால், உடனடியாக பதிலடி கொடுத்தோம் என்றார்.