தெஹ்ரான்
ஈரான் நாட்டின் அரசு ஊடகம் பிரஸ் டி.வி. இன்று வெளியிட்ட செய்தியில், இஸ்ரேலுக்கு எதிராக கடந்த 24 மணிநேரத்தில், 63 இடங்களில் ஹிஸ்புல்லா கடும் தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்பு படையின் சமீபத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, லெபனான் பிராந்தியம் மற்றும் குடிமக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக, இந்த தாக்குதலை நடத்தினோம் என ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
இதில், ராக்கெட் தாக்குதல்கள், டிரோன் வீச்சுகள் மற்றும் பீரங்கி குண்டுவெடிப்பும் அடங்கும். இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கூடுமிடம், கவச வாகனங்கள், தளங்கள் மற்றும் படையினரின் தளங்கள் என எல்லை பகுதிகளில் அமைந்த இடங்கள் முக்கிய இலக்காக கொள்ளப்பட்டு உள்ளன என தகவல் தெரிவிக்கின்றது.
அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து ஈரான் நாட்டை வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து இஸ்ரேலை தாக்கியது. இதனால், லெபனான் நாட்டையும் இஸ்ரேல் தாக்கி வருகிறது.
இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலால் கடந்த 2-ந்தேதியில் இருந்து இதுவரை, லெபனான் நாட்டில் 1,020-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 2,600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். 1.34 லட்சம் பேர் புகலிடம் தேடி சென்று நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.