உலக செய்திகள்

தென் கொரியாவில் அதிவேக படகில் குண்டுவெடிப்பு: கடற்படை வீரர்கள் 6 பேர் படுகாயம்

தென் கொரியாவில் அதிவேக படகில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி, கடற்படை வீரர்கள் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

சியோல்,

தென்கொரியாவின் தென்கடல் பகுதியில் நேற்று முன்தினம் கடற்படை வீரர்கள் 30 பேர் அதிவேக படகு ஒன்றில் சவாரி செய்து, துப்பாக்கி சூடு பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு அந்த அதிவேக படகுக்குள் பலத்த சத்தத்துடன் கையெறி குண்டு ஒன்று வெடித்தது.

இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இந்த குண்டு வெடித்ததின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கடலிலும், கடலுக்கு வெளியிலும் நடந்து வந்த துப்பாக்கி சூடு பயிற்சிகளை கடற்படை நிறுத்தி வைத்துள்ளது.