மரியம் ஷேக் 
உலக செய்திகள்

இந்திய பணிப்பெண்ணுக்கு சொந்த வீடு வாங்க ரூ.47 லட்சம் திரட்டிய ஹாங்காங் பெண் முதலாளி

மரியமின் நிலையை உணர்ந்த அவரது உரிமையாளர் அபீர் தபாகி, அவருக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்று முடிவு செய்தார்.

பெய்ஜிங்,

தன் வீட்டில் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வரும் இந்திய வீட்டுப் பணிப்பெண்ணின் வாழ்நாள் கனவை நனவாக்க, சீன நாட்டிலுள்ள ஹாங்காங்கைச் சேர்ந்த பெண் ஒருவர் இணையவழியில் ரூ.47 லட்சத்திற்கும் மேல் நிதி திரட்டி உதவி செய்துள்ளார். இந்த மனிதநேயமிக்க செயல் சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

யார் இந்த மரியம் ஷேக்?

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட மரியம் ஷேக், ஹாங்காங்கில் உள்ள உள்ளடக்க உருவாக்குநரான அபீர் தபாகி என்பவரது வீட்டில் வீட்டு பணிப்பெண்ணாக வேலை பார்த்து வருகிறார். மரியம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமையல் வீடியோக்களைப் பதிவிட்டு 20,000-க்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ளார். சமூக ஊடகங்களில் எப்போதும் புன்னகையுடன் காணப்படும் மரியமின் நிஜ வாழ்க்கை பல்வேறு சோகங்கள் நிறைந்தது.

துன்புறுத்தலும் துயரமும்

5 வயதில் தத்து எடுக்கப்பட்ட மரியம், வளர்ந்த பிறகு தனது வளர்ப்பு குடும்பத்தினரால் பல ஆண்டுகளாக நிதி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடுமையான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அவர் உழைத்து சம்பாதித்த பணம் அனைத்தையும் குடும்பத்தினரே பறித்துக்கொண்டனர். அத்துடன், தீவிர உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது கணவரின் மருத்துவ செலவுகளையும் மரியமே கவனித்து வருகிறார். இதனால், இத்தனை ஆண்டுகள் கடினமாக உழைத்தும் மரியமிற்கு என்று சொந்தமாக ஒரு வீடு கூட இல்லாமல், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்.

கைகொடுத்த 'GoFundMe' நிதித் திரட்டல்

மரியமின் நிலையை உணர்ந்த அவரது உரிமையாளர் அபீர் தபாகி, அவருக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்று முடிவு செய்தார். மரியமிற்கு சொந்தமாக ஒரு பாதுகாப்பான வீடு வாங்கி தருவதற்காக 'கோபண்ட்மீ' (GoFundMe) என்ற இணையதள பக்கத்தில் ஒரு நிதித் திரட்டல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். மரியமின் கதையைக் கேட்டு நெகிழ்ந்த உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான இணையவாசிகள், தாராளமாக நிதி உதவி வழங்கினர். இதன் விளைவாக, குறுகிய காலத்திலேயே இலக்கைத் தாண்டி சுமார் ரூ.47 லட்சம் (£45,000-க்கும் மேல்) நிதி திரட்டப்பட்டுள்ளது.

நெகிழ்ச்சியில் மரியம்-தபாகி

இந்த நிதியுதவியின் மூலம் மரியம் ஷேக் தனது வாழ்நாள் கனவான சொந்த வீட்டை வாங்கவுள்ளார். "எப்போதும் மற்றவர்களுக்காகவே வாழும் மரியமிற்கு, இந்த உலகம் திருப்பித் தந்த அன்பு இது" என அபீர் தபாகி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT