உலக செய்திகள்

செங்கடலில் எகிப்து கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: 6 பேர் பலி

செங்கடலில் சவுதி எண்ணெய் கப்பல்கள் மீதும், அந்நாட்டின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

சனா,

செங்கடலில் சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சி படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஏமன் அருகே செங்கடலின் நுழைவுப் பகுதியில் அமைந்துள்ள பாப் அல்-மந்தப் நீரிணை அருகே சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்தக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஏமன் கடலோரக் காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மீட்புக் குழுவினர் சிகிச்சை அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்களே காரணம் என ஏமன் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனினும், தாக்குதல் குறித்து ஹவுதி அமைப்பு உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

மீண்டும் பதற்றம்

கடந்த சில ஆண்டுகளாக செங்கடல் பகுதியில் வர்த்தகக் கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் சர்வதேச கடல் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.தற்போது மீண்டும் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் செங்கடல் பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.முக்கிய கடல்வழிப் பாதையான பாப் அல்-மந்தப் நீரிணை வழியாக ஏராளமான சரக்கு கப்பல்கள் சென்று வருகின்றன.

இப்பகுதியில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெறும் பட்சத்தில் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு மேலும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி அரேபியா ஆதரவுடன் செயல்படும் ஏமன் அரசுக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்து வந்த போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த மாதம் முறிந்ததைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது. ஈரான்–அமெரிக்கா இடையே மோதல் தீவிரமடைந்த நிலையில், ஏமனில் மீண்டும் சண்டை ஏற்பட்டதால் இந்த போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

ஐ.நா. ஆதரவுடன் 2022-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவுக்கு எதிராக கடல் முற்றுகையை அறிவித்தனர். இதன் ஒரு பகுதியாக செங்கடலில் சவுதி எண்ணெய் கப்பல்கள் மீதும், அந்நாட்டின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதே நேரத்தில், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிட்டுள்ள நிலையில், ஹவுதிகளின் நடவடிக்கையும் செங்கடல் பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இதனால் உலகின் முக்கிய கடல்வழி வர்த்தகப் பாதைகளில் கப்பல் போக்குவரத்துக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.