வாஷிங்டன் டி.சி.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது.
ஆனால், ஈரான், அமெரிக்கா இடையே நிரந்தர போர் நிறுத்தத்திற்காக பாகிஸ்தானில் 21 மணிநேரம் நீடித்த தொடக்க கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்கா தெரிவித்தது.
எனினும், 2-வது சுற்று அமைதி பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதனை உலக நாடுகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. 2 வார கால போர் நிறுத்தத்திற்கான காலக்கெடு முடிவடைய உள்ள சூழலில், இந்த அமைதி பேச்சுவார்த்தை பற்றி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறும்போது, பதற்றங்கள் அதிகரித்து வரும்போதும், புதிய பேச்சுவார்த்தைகளுக்கான நிச்சயமற்ற நிலை காணப்பட்டபோதும், ஒப்பந்தம் ஒன்று ஏற்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
அதேவேளையில், பேச்சுவார்த்தைக்கான கால அளவு அதன் வரம்பை அடைந்து விட்டது என டிரம்ப் தெளிவுப்படுத்தி உள்ளார். அதனால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். அல்லது பெரும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
ஏனெனில், அமெரிக்க ராணுவம் போருக்கு செல்ல ஆவலாக உள்ளது என கூறினார். உச்சபட்ச தயார் நிலையில், அமெரிக்க படைகள் உள்ளன. நம்முடைய மற்றும் உலக நலன்களை பாதுகாக்க கூடியஒப்பந்தம் ஒன்றை நாம் ஏற்படுத்தவில்லை என்றால், நாங்கள் குண்டு வீச போகிறோம். அதுவே சிறந்த ஒன்றாக இருக்கும் என்று கூறினார்.
அமெரிக்க தாக்குதல்கள் ஈரானுக்கு பெரிய அளவில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்த கூடும் என்றும் அவர் கூறினார். போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்படவில்லை எனில் உடனடியாக தாக்குதல் நடத்தப்படும் என்றும் டிரம்ப் மிரட்டலாக கூறியுள்ளார்.