லாகூர்,
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 73). பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இவர், 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார். பின்னர், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பிரதமர் பதவியை இம்ரான்கான் இழந்தார். மேலும், பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார்.
இதனை தொடர்ந்து இம்ரான்கான் மீது ஊழல் முதல் பயங்கரவாதம் வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த வழக்குகளில் 2023 ஆகஸ்ட் 5ம் தேதி கைது செய்யப்பட்ட இம்ரான்கான் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து இம்ரான்கான் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இம்ரான் கானின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக கூறப்படும் நிலையில் அவரை பார்க்க குடும்ப உறுப்பினர்களுக்கு சிறையில் அனுமதி வழங்கப்படவில்லை. குறிப்பாக அவரது கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும், இம்ரான் கானுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க பாகிஸ்தான் அரசு மறுத்து வருவதாகவும் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இதனிடையே, இம்ரான் கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க உத்தரவிடுமாறு சுப்ரீம் கோட்டில் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இம்ரான் கானை அடுத்த 48 மணி நேரத்திற்குள் இஸ்லாமாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பாகிஸ்தான் அரசுக்கு கடந்த 18ம் தேதி உத்தரவிட்டது. மேலும், இம்ரான் கானுக்கு மருத்துவமனையில் அடுத்த மாதம் 16ம் தேதி வரை சிகிச்சை அளிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் இம்ரான்கான் அனுமதிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் நேற்று இஸ்லாமாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடல்நல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இம்ரான்கான் நள்ளிரவே மீண்டும் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் அடைக்கப்பட்டார். அவர் உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியதாகவும், இதையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இம்ரான் கானுக்கு உரிய சிகிச்சை வழங்க அரசு மறுப்பதாக அவரின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.