வாஷிங்டன்,
தெற்கு ஆசிய பிராந்தியத்தில் இருபெரும் அணு ஆயுத நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும் பரம எதிரிகளாக இருந்து வருகின்றன. எனினும் இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா விரும்புகிறது.
ஆனால் இதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும்போதெல்லாம், பாகிஸ்தான் ஏதாவது ஒரு வகையில் முட்டுக்கட்டை போட்டு வருகிறது. குறிப்பாக பதான்கோட் விமானப்படை தளம் மற்றும் உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் சமீபத்திய ஆண்டுகளில் நடத்திய தாக்குதல்களால் இரு நாட்டு அமைதி பேச்சுவார்த்தை தடைபட்டு உள்ளது. அது மட்டுமின்றி இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்ததும், காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் அத்துமீறிய தாக்குதல்களும் பேச்சுவார்த்தைக்கான சூழலை முற்றிலும் முடக்கி இருக்கிறது.
ஒருபுறம் பயங்கரவாத தாக்குதல்கள் அரங்கேறும்போது மறுபுறம் பேச்சுவார்த்தை நடத்துவது முறையல்ல எனக்கூறி இருநாட்டு பேச்சுவார்த்தைக்கு இந்தியா தற்போது மறுத்து வருகிறது. இந்த சூழலில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரு நாட்டு பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். பாகிஸ்தானின் இந்த கோரிக்கையை இந்தியாவும் ஏற்றுக்கொண்டது.
இதன்படி, நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்கும் இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகளும் சந்தித்து பேசுவார்கள் என்று தெரிகிறது. இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக வெளியான செய்தி சிறப்பு மிக்கது என்று அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹீதர் நயூர்ட் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறும் போது, இந்தியா- பாகிஸ்தான் தலைவர்கள் சந்தித்து பேச இருப்பதாக வெளியான தகவல்கள் எங்கள் கவனத்துக்கு வந்தது. மிகவும் சிறப்பான செய்தி இது என்று நான் கருதுகிறேன் என்றார்.