உலக செய்திகள்

சீக்கிய அமைப்புகள் பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் கனடாவில் விசாரணை

இந்தியாவில் நீதிக்கான சீக்கிய அமைப்பு, காலிஸ்தான் ஆதரவு பாபர் கல்சா இன்டர்நேஷனல், காலிஸ்தான் ஜிந்தாபாத் படை, காலிஸ்தான் புலிப்படை போன்ற பயங்கரவாத அமைப்புகள் இயங்கி வருகின்றன. இந்த அமைப்புகளுக்கு எங்கிருந்து நிதி வருகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

கனடாவில் சீக்கியர்கள் திரளாக வாழ்கின்றனர். இதே போன்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் சீக்கியர்கள் உள்ளனர்.

அவர்கள் மூலமாக நிதி வருகிறதா என்று என்.ஐ.ஏ. என்னும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். அந்த வகையில் முதலில் என்.ஐ.ஏ. ஐ.ஜி. தலைமையிலான குழுவினர், கனடா சென்று விசாரணை நடத்தி உள்ளனர். அங்கு ஆர்.சி.எம்.பி. என சொல்லப்படுகிற அந்த நாட்டு போலீஸ் அதிகாரிகளுடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆலோசனையும் நடத்தி உள்ளனர்.

இதுபற்றி கனடாவில் உள்ள இந்திய தூதர் அஜய் பிசாரியா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், இந்தியா, கனடா மூலோபாய கூட்டு, குற்றங்கள், பயங்கரவாதம் தொடர்பான விசாரணையில் நல்லதொரு ஒத்துழைப்புக்கு வழிநடத்தி உள்ளது. இந்தியாவையும், கனடாவையும் பாதுகாப்பாக வைப்பதற்காக ஆர்.சி.எம்.பி.யும், என்.ஐ.ஏ.வும் ஒன்றிணைந்து உழைக்கின்றனர் என கூறி உள்ளார்.