உலக செய்திகள்

ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த தடை

வணிகக் கப்பல்களுக்கு ஹார்முஸ் நீரிணை தற்போது மிகவும் ஆபத்தானதாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தாக்குதல்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களில் இந்திய மாலுமிகளைப் பணியமர்த்துவதை நிறுத்துமாறு கப்பல் உரிமையாளர்கள், கப்பல் மேலாளர்கள் மற்றும் ஆள்சேர்ப்பு முகமைகளுக்கு இந்தியா உத்தரவிட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, "அடுத்த உத்தரவு வரும் வரை" இந்த நீர்வழிப் பாதையில் பயணிக்கும் கப்பல்களில் இந்திய மாலுமிகள் பணியமர்த்தப்படக் கூடாது என்று கப்பல் போக்குவரத்துக்கான தலைமை இயக்குநரகம் (Directorate-General of Shipping) நேற்றிரவு தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணை

இதுதொடர்பான அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஹார்முஸ் நீரிணை பாரசீக வளைகுடாவை உலகளாவிய சந்தைகளுடன் இணைக்கிறது. அமைதிக் காலங்களில், இது தினசரி உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கைத் தாங்கிச் செல்லும் முக்கியப் பாதையாகத் திகழ்ந்தது. இந்த நீர்வழியின் கட்டுப்பாட்டை கைப்பற்றுவதில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போட்டி நிலவுகிறது.

வளைகுடாப் பகுதியில் அதிகரித்துள்ள பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, கடல்சார் நிர்வாக இயக்குநரகம் (DGMA) தனது சுற்றறிக்கை எண் 36/2026-இன் மூலம், கப்பல் உரிமையாளர்கள், கப்பல் மேலாளர்கள் மற்றும் RPSL நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, அடுத்த உத்தரவு வரும் வரை ஹார்முஸ் நீரிணை வழியாகப் பயணம் மேற்கொள்ளும் கப்பல்களில் இந்தியக் கடல்சார் பணியாளர்களை (seafarers) பணியமர்த்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை

முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

- அடுத்த உத்தரவு வரும் வரை, ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களில் இந்தியக் கடல்சார் பணியாளர்களைப் பணியமர்த்தக் கூடாது.

- பாரசீக வளைகுடா, ஹார்முஸ் நீரிணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் பாதுகாப்புக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும்.

- வழிசெலுத்தல் தொடர்பான எச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஆலோசனைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்; அத்துடன் ISPS விதிமுறைகளை (ISPS Code) கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்.

- அவசர காலங்களில் IFC-IOR மற்றும் DG தகவல் தொடர்பு மையம் (MMDAC) ஆகியவற்றின் மூலம் உடனடியாகத் தகவல் தெரிவிக்கவும், உதவிகளைப் பெறவும் வேண்டும்.

மாறிவரும் பாதுகாப்புச் சூழலை DGMA தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது; மேலும், இந்தியக் கடல்சார் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதில் உறுதியுடன் உள்ளது

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சமீபத்திய நாட்களில் அப்பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் கப்பல்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட சம்பவமும் அடங்கும்.

இரண்டாவது இந்தியா

வணிகக் கப்பல்களுக்கு இந்த முக்கிய நீர்வழிப் பாதை (chokepoint) தற்போது மிகவும் ஆபத்தானதாக உள்ளது என்று சர்வதேச கடல்சார் அமைப்பு (International Maritime Organisation) எச்சரித்துள்ளது. வர்த்தகக் கப்பல்களில் 3,10,000-க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகள் பணிபுரிகின்றனர். இதன் மூலம் மாலுமிகளை வழங்கும் நாடுகளில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாக திகழ்கிறது என்று வர்த்தக அமைப்பான BIMCO மற்றும் சர்வதேச கப்பல் போக்குவரத்துச் சங்கம் (International Chamber of Shipping) ஆகியவற்றின் மதிப்பீடு தெரிவிக்கிறது.

உலகின் முன்னணி மாலுமிகள் வழங்கும் நாடான பிலிப்பைன்ஸ், தனது குடிமக்களை பாரசீக வளைகுடா பகுதிக்கு அனுப்புவதை நிறுத்துமாறு முகமைகளுக்கு உத்தரவிட்டு பணியாளர் பற்றாக்குறையை அதிகரித்திருந்தது. அந்த நடவடிக்கையை ஒத்ததாகவே இந்தியாவின் இந்த நடவடிக்கையும் அமைந்துள்ளது.

புனேயை சேர்ந்த மாலுமி உடல் மீட்பு

ஓமன் கடற்பகுதியில் கடந்த 12-ந்தேதி ஈரானின் தடையை மீறி ஹார்முஸ் நீரிணை கடந்து சென்ற சைப்ரஸ் நாட்டின் ஜி.எப்.எஸ். கேலஸ்சி என்ற கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் உள்ளிட்ட 23 பேர் கடலில் குதித்தனர். அவர்களில் 10 இந்திய மாலுமிகள் உள்பட 22 பேர் மீட்கப்பட்டனர். ஒரு இந்திய மாலுமி மாயமானார்.

ஓமன் கடற்பகுதியில் மாயமான இந்திய மாலுமியை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தநிலையில் அவர் பிணமாக மீட்கப்பட்டார். அவர் மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த ஹெராம் கர்மார்கர் (வயது 30) என்று தெரியவந்துள்ளது.

இதேபோல நேற்று முன்தினம் ஓமன் கடற்பகுதி வழியாக ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற 2 அமீரக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு இந்திய மாலுமி உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.