உலக செய்திகள்

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தேச நலனே காரணம் - மத்திய அரசு

140 கோடி மக்களின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயமும் நமக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தேசிய நலனே நமது எரிசக்தி கொள்முதல்களை வழிநடத்துகிறது என்று ரஷிய எண்ணெய் இறக்குமதி குறித்து மத்திய வெளியுறவுத்துறை விளக்கம் அளித்து உள்ளது.

ஜெய்சங்கர்

ரஷியாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே உக்ரைன் நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், "ஏதோ ஒரு நாடு எண்ணெய் வாங்குவதாலோ அலலது வாங்காததாலோ உக்ரைன் பிரச்சினை தீர்க்கப்பட்டு விடாது என்றும், மாறாக பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் மூலமே தீர்க்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

தேச நலன்

இதனை டெல்லியில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாலிடம் கேள்வியாக கேட்கப்பட்டது.

ரஷிய எண்ணெயை வாங்குவது குறித்த தனது நிலைப்பாட்டை இந்தியா, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் எவ்வாறு தெரிவித்தது? என கேட்கப்பட்டது.

140 கோடி மக்கள்

அதற்கு செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:-

எரிசக்தி இறக்குமதி அல்லது கொள்முதல் விஷயத்தில், அதை எது வழிநடத்துகிறது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். நமது தேச நலனே நமது எரிசக்தி கொள்முதல்களை வழி நடத்துகிறது.

மேலும், 140 கோடி மக்களின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயமும் நமக்கு உள்ளது. அதுவே எங்களை வழி நடத்துகிறது. அதுவே எங்கள் கொள்கையாகவும் தொடரும்.

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவால் ஏதாவது செய்ய முடியும் என்றால் அதை செய்ய தயாராக இருப்பதாக வெளியுறவு மந்திரி கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

சொந்த எரிசக்தி தேவை

இந்நிலையில் உக்ரைன் போருக்கு நிதியளிக்க ரஷியாவுக்கு உதவும் நோக்கத்தில் இந்தியா கச்சா எண்ணெயை வாங்கவில்லை. மாறாக, தனது சொந்த எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்யவும் நாட்டின் வளர்ச்சியை ஆதரிக்கவுமே இந்தியா அவ்வாறு செய்கிறது என்று இந்தியாவில் உள்ள ரஷியத் தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் இந்த எண்ணெய் கொள்முதல் குறித்து மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் அதிகரித்து வரும் சூழலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT