ஜகார்தா,
அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
பயணத்தின் முதல் நாடாக பிரதமர் மோடி நேற்று இந்தோனேசியா சென்றார். அவரை அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோ விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் இந்தோனேசிய பயணத்தின்போது வர்த்தகம், பாதுகாப்பு தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
அதன்படி, இந்தியாவிடமிருந்து அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க இந்தோனேசியா திட்டமிட்டுள்ளது. பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் பிரதமர் மோடி, அதிபர் பிரபோவோ சுபியாந்தோ முன்னிலையில் இன்று கையெழுத்தானது.
அதேபோல், இந்தியாவிடமிருந்து அஸ்திரா ஏவுகணைகளையும் கொள்முதல் செய்ய இந்தோனேசியா முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தமும் இன்று கையெழுத்தானது. எதிரிநாட்டு ஏவுகணைகளை வானிலையே சுட்டு வீழ்த்தும் வல்லமைபெற்ற ஏவுகணையாக அஸ்திரா உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது அஸ்திரா ஏவுகணைகள் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது.
பிரதமர் மோடியின் இந்தோனேசிய பயணத்தின்போது பாதுகாப்பு மட்டுமின்றி வர்த்தகம், கனிம வளம் உள்பட 10க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.