லண்டன்,
கேரளாவில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர் அரவிந்தன் பாலகிருஷ்ணன் (வயது 81). சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் வளர்ந்த அவர், அதன்பின்னர் 1963ம் ஆண்டு லண்டன் பொருளாதார பள்ளியில் படிப்பதற்காக இங்கிலாந்துக்கு சென்றார்.
அந்நாட்டில் சந்தா என்ற பெண்ணை சந்தித்து, 1969ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு தெற்கு லண்டனில் பிரிக்ஸ்டன் பகுதியில் வசித்த தம்பதியின் வீட்டுக்கு ஸ்காட்லாந்து யார்டு போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
அவர் மீது 2 பெண்கள் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு கூறி இருந்தனர். ஆனால், இதனை மறுத்த அவர், நீதிபதியிடம் கூறும்போது, தன் மீது பாலியல் இச்சையுடன் இருந்த இரு பொறாமைக்கார பெண்களுக்கு இடையே இருந்த போட்டியின் மைய புள்ளியாக நான் இருந்தேன் என கூறியுள்ளார்.
அரவிந்தன் லண்டனில் ரகசிய மாவோயிஸ்டு குழு ஒன்றை நடத்தி வந்துள்ளார். அவரை பின்பற்றியவர்கள் தோழர் பாலா என அரவிந்தனை அழைத்து வந்துள்ளனர். அந்த அளவுக்கு அவருக்கு செல்வாக்கு இருந்தது.
அவர் தனது மகளை 30 ஆண்டுகளாக சிறை பிடித்து வைத்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் அவரிடம் நடத்திய விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது. நீதிமன்றத்தில் பேசிய அவரது மகள், பயங்கர, மனிதநேயமற்ற மற்றும் தரம் தாழ்ந்த வகையில் இருந்தது என தனது சூழ்நிலையை விளக்கினார்.
வெளி உலகில் இருந்து அவரை பாதுகாக்கிறேன் என கூறி, அதற்காக சிறை வைத்திருக்கிறேன் என்று கூறி, ஒரு கொடூர சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறீர்கள் என நீதிபதி அவரை நோக்கி கடுமையாக சாடினார். அவரை (மகளை) ஒரு நபராக எண்ணாமல், ஒரு கருவியாக நடத்த முடிவு செய்துள்ளீர்கள் என்றும் கூறியுள்ளார்.
அரவிந்தன் மீது 2016ம் ஆண்டு 4 பாலியல் பலாத்காரம், 2 பேருக்கு உடல்ரீதியில் துன்பம் விளைவித்தல் மற்றும் 6 தகாத முறையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு, விசாரணை முடிவில் இங்கிலாந்து நீதிமன்றம் அவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இதனை தொடர்ந்து, தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள டார்ட்மூர் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். கடந்த 6 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த அவர், நேற்று திடீரென உயிரிழந்து உள்ளார். இதனை இங்கிலாந்து சிறை சேவை துறை தெரிவித்து உள்ளது.