கொழும்பு,
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான உறவுகளில் மீனவர் விவகாரம் ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறப்படும் பல சம்பவங்களில், இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களின் படகுகளைக் கைப்பற்றியதுமான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
குறிப்பாக தமிழ்நாட்டையும் இலங்கையையும் பிரிக்கும் குறுகிய நீர்ப்பரப்பான பாக் நீரிணை(Palk Strait), இரு நாட்டு மீனவர்களுக்கும் ஒரு சிறந்த மீன்பிடி தளமாக விளங்குகிறது. இங்கு மீன்பிடிக்கும்போது இரு நாட்டு மீனவர்களும் தெரியாமலோ, அல்லது தவறுதலாகவோ எல்லை தாண்டிச் செல்லும்போது கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர்.
இந்த நிலையில், 11 இந்திய மீனவர்களுடன் சென்ற இந்திய மீன்பிடி படகு ஒன்று, சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. அந்த படகு நேற்றைய தினம்(புதன்கிழமை) பாக் நீரிணையில் அமைந்துள்ள டெல்ப்ட் தீவு (நெடுந்தீவு) அருகே உள்ள கடலோரப் பவளப்பாறைப் பகுதியில் தரைதட்டி விபத்திற்குள்ளானதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் கமாண்டர் சமிந்த வாலகுலுகே கூறுகையில், “இந்திய கப்பல் ஒன்று இலங்கை கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது விபத்திற்குள்ளானது. அதில் 11 பேர் இருந்தனர். பவளப்பாறையின் மீது மோதியதால், அந்த மீன்பிடிப் படகில் சேதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பெரிய அளவில் ஆபத்து ஏற்படவில்லை.
படகில் உள்ள இந்திய மீனவர்களுக்கு உதவுவதற்காக மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டு மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.