லிஸ்பன்,
இந்திய கடற்படையின் பாய்மரப் பயிற்சி கப்பலான ‘ஐஎன்எஸ் சுதர்ஷினி’, உலகளாவிய ஏழு மாதக் கடல் பயணத்தில், லிஸ்பன் துறைமுகத்திற்கு மேற்கொள்ளும் 15-வது துறைமுக பயணமாகும். ‘லோக்காயன் 26’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பிரமாண்ட கடல் கடந்த பயணத்தின் ஒரு பகுதியாக, போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகருக்கு கப்பல் நேற்று சென்றடைந்தது.
மூன்று பிரமாண்ட பாய்மரங்களை கொண்ட ஐஎன்எஸ் சுதர்ஷினி கப்பல், அங்குள்ள புகழ்பெற்ற தாகஸ் நதியில் கம்பீரமாக நுழைந்தது. அப்போது பாரம்பரிய பாய்மரப் படகோட்டுதல் முறைகளை கையாண்டு, இந்திய கடற்படையினரின் கடல்சார் திறன்களை வீரர்கள் அங்கு வெளிப்படுத்தினர். இதனை அங்கிருந்தவர்கள் வியப்புடன் பார்த்து ரசித்தனர்.
இந்த துறைமுக பயணத்தின் போது, கப்பலில் உள்ள இந்திய அதிகாரிகள் மற்றும் இளம் பயிற்சியாளர்கள், போர்ச்சுகீசிய கடற்படை தலைமை அதிகாரிகளையும், அந்த நாட்டு உள்ளூர் அதிகாரிகளையும் நேரில் சந்தித்து கலந்துரையாட உள்ளனர்.
கலாச்சார நிகழ்வுகள்மேலும், இரு நாட்டு கடற்படைக்கு இடையேயான தொழில்முறை பரிமாற்றங்கள், பரஸ்பர கப்பல் சந்திப்புகள் மற்றும் இந்திய-போர்ச்சுகல் நட்புறவை வளர்க்கும் பல்வேறு கலாச்சார கூட்டு நிகழ்வுகளும் இந்த சுற்றுப்பயணத்தின் போது அடுத்தடுத்து நடைபெற உள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.