AI IMAGE 
உலக செய்திகள்

மாலியில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி வைர தொழிலதிபர்... பல கோடி கொடுத்து மீட்ட குடும்பத்தினர்

அவரை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.100 கோடி கொடுக்கவேண்டும் என்று கேட்டு கடத்தல்கார்கள் மிரட்டல் விடுத்தனர்.

பமாகோ,

மாலியில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி வைர தொழிலதிபர் ரமணி, நீண்டகால பேச்சுவார்த்தை மற்றும் ரூ.43.94 கோடி பிணைப்பணத்துக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச வைர வர்த்தகம்

குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவரும், சூரத்தின் வைர வர்த்தகத்துடன் தொடர்புடையவருமானவர் ரமணி(வயது 75). இவர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து, அங்கு தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சர்வதேச வைர வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ரூ.100 கோடி

இவர் கடந்த ஏப்ரல் மாதம் மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலிக்கு வியாபாரத்திற்காக சென்றார். அங்கு அவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.100 கோடி கொடுக்கவேண்டும் என்று கேட்டு கடத்தல்கார்கள் மிரட்டல் விடுத்தனர்.

ரூ.43.94 கோடி

ஆனால் ரமணியின் குடும்பத்தினர், அவரை விடுவிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். நீண்ட நாட்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் ரமணியின் குடும்பத்தினர் 4 மில்லியன் யூரோக்கள் (இந்திய ரூபாயில் 43.94 கோடி) பிணைப்பணம் செலுத்துவதாக பேரம் பேசினர்.

அதனை தொடர்ந்து கடத்தல் காரர்களிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ரமணியை கடத்தல் காரர்கள் விடுவித்தனர்.

தற்போது இந்த கடத்தல் மற்றும் விடுவிப்பு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.