வாஷிங்டன்,
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியான மகேந்தர் மகிஜானி (வயது 44) அங்குள்ள பிரபல வங்கியில் சுமார் ரூ.950 கோடி (100 மில்லியன் டாலர்) சுருட்டிய விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகேந்தர் தனது போலி நிறுவனங்களின் பெயர்களில், போலியான காப்பீட்டுப் பத்திரங்களைத் தயாரித்து வங்கியிடமிருந்து கோடிக்கணக்கில் கடன் பெற்று மோசடி செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. வங்கி அதிகாரிகள் இதுகுறித்து சந்தேகம் எழுப்பிய போதெல்லாம், அவர் தொடர்ந்து பொய்களை கூறி மழுப்பி வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரது ரகசிய பண பரிவர்த்தனைகளை கண்காணித்த அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள், மகேந்தரை நேற்று அதிரடியாக கைது செய்தனர். இந்த மெகா நிதி மோசடி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.