உலக செய்திகள்

ஜப்பானில் கொரோனா பரவலை தடுக்க புதிய சட்டம் மூலம் கட்டுப்பாடுகள் தீவிரம்

புதிய சட்டம் மூலம் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு நடவடிக்கைகளை ஜப்பான் அரசு கடுமையாக்கியுள்ளது.

டோக்கியோ,

ஜப்பானில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சற்று அதிகரித்து வருகிறது. இதனால் ஜப்பானில் வரும் மார்ச் 7-ந் தேதி வரை அவரச நிலை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜப்பான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஜப்பானில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் ஜப்பான் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன்படி ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட பின், அவர் மருத்துவமனைக்கு செல்ல மறுப்பு தெரிவித்தால் 5 லட்சம் யென் (இந்திய மதிப்பில் சுமார் 3.46 லட்சம் ரூபாய்) அபராதமாக விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்கள், ரெஸ்டாரன்ட்களை இரவு 8 மணியுடன் மூட வேண்டும். அதை மீறி செயல்பட்டால், 3 லட்சம் யென் அபராதமாக செலுத்த வேண்டும் என சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மக்கள் பழகுவதற்காக 10 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படும் என்றும் அதன்பின் கடுமையான வகையில் கடைபிடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT