டெஹ்ரான்,
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் கடந்த 28-ந்தேதி கூட்டு ராணுவ தாக்குதலை நடத்தியது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி மட்டுமின்றி 180 சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
இதற்கு பழி தீர்க்கும் வித மாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அதன் நட்பு நாடுகள் மீது ஈரான் போர் அறிவித்து தாக்குதல் நடத்தி வருகிறது. நீடித்து வரும் இந்த போரில் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டது. உலகுக்கு தேவையான 25 சதவீதம் அளவிலான கியாஸ், பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் பொருட்கள் இதன் வழியாக விநியோகம் ஆகி வந்த நிலையில் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடிய விவகாரம் நேரடியாக பல நாடுகளில் எதிரொலித்து.
இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பியுள்ள பல நாடுகளில் எரிபொருள் மற்றும் கியாஸ் தட்டுப்பாடு ஏற்பட்டது. குறிப்பாக ஆசியா நாடுகளான சீனா, ஜப்பான், பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை உள்ளிட்வற்றில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு தாறுமாறாக விலை உயர்ந்தது. மேலும் இது நேரடியாக அந்தந்த நாடுகளின் பொருளாதாரத்தை பலம் இழக்க செய்தது. போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகளுடன் மத்தியஸ்தம் செய்ய முயற்சி செய்து வருகின்றன.
இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்துக் கப்பல்களுக்கும் கட்டணம் விதிக்க வழிவகுக்கும் வகையில், மார்ச் 26ல் புதிய சட்ட மசோதாவை ஈரான் அரசு தயாரித்து சமர்பித்திருந்தது. இந்நிலையில் ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்கும் திட்டத்திற்கு இன்று நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த புதிய திட்டத்தின்படி, நீரிணையை கடக்கும் கப்பல்கள் ஈரானின் தேசிய நாணயமான 'ரியால்' மூலம் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நாடுகளின் கப்பல்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.