உலக செய்திகள்

மத்திய கிழக்கில் பயங்கரவாதம் மற்றும் ஸ்திரமற்ற நிலைக்கு ஈரானே காரணம்; கனடா பிரதமர் இந்தியாவில் பேச்சு

அணு ஆயுத உற்பத்தியை முடிவுக்கு கொண்டு வரும்படி ஜி7 உச்சி மாநாடு உள்பட பல்வேறு இடங்களில் ஈரானிடம் தொடர்ந்து கூறி வந்தோம் என கூறினார்.

மும்பை

அமெரிக்காவுடன் சேர்ந்து இஸ்ரேல், மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானை இன்று கடுமையாக தாக்கியது. இதில் போர் ஜெட் விமானங்கள் வான் வழியே தாக்குதல் நடத்தின. இதனால் நகரத்தின் சில பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. தெற்கு ஈரானின் ஹர்மோஜ்கான் மாகாணத்தில் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளியின் மீது இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

இந்த தாக்குதலை நிறுத்தும்படி இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் கூறி வருகின்றன. இந்நிலையில், கனடா பிரதமர் இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதற்காக அவர் மும்பைக்கு இன்று வருகை தந்துள்ளார். அவர் கூட்டம் ஒன்றில் பேசும்போது, மத்திய கிழக்கில் என்னுடைய நாட்டின் நிலைப்பாடு எப்போதும் தெளிவாக உள்ளது என்றார்.

அந்த பகுதி முழுவதும் பயங்கரவாதம் மற்றும் ஸ்திரமற்ற நிலை நீடிக்க ஈரானே காரணம் என கூறினார். உலகின் மனித உரிமைகள் பதிவுகளில் மிக மோசம் வாய்ந்த நாடுகளில் ஈரான் ஒன்று. அந்நாடு ஒரு போதும் அணு ஆயுதங்களை பெறவோ அல்லது தயாரிக்கவோ அனுமதிக்கவே கூடாது என கூறினார்.

கனடாவும் எங்களுடைய கூட்டணி நாடுகளும் அணு ஆயுத உற்பத்தியை முடிவுக்கு கொண்டு வரும்படி ஜி7 உச்சி மாநாடு உள்பட பல்வேறு இடங்களில் ஈரானிடம் தொடர்ந்து கூறி வந்தோம் என்று கூறினார்.