அமான்,
ஜோர்டான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.
இதையடுத்து, இரு தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதன் காரணமாக சில நாட்கள் மத்திய கிழக்கில் சற்று அமைதியான சூழ்நிலை நிலவி வந்தது.
ஆனால், ஈரான் , அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. அதன்படி, கடந்த மாதம் இறுதியில் இருந்து இரு நாடுகளும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் ஈரான் கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஈரானின் கார்க் தீவில் நிறுத்தப்பட்டிருந்த 5 ஈரானிய கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
அமெரிக்காவின் போர் கப்பல் மீது ஈரான் நேற்று முன் தினம் தாக்குதல் நடத்தியதாகவும், அந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஜோர்டானின் பப்ரக், அஸ்ரக் நகரங்களில் அமைந்துள்ள அமெரிக்க விமானப்படை தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து 2 அமெரிக்க கப்பல்கள், 8 கச்சா எண்ணெய் கப்பல்கள், 10 சரக்கு கப்பல்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.