உலக செய்திகள்

சிரியா, குவைத் மற்றும் ஓமன் மீது ஈரான் பதிலடி தாக்குதல்

குவைத்தில் அமெரிக்க படைகள் தங்கியுள்ள ராணுவ தளத்தில் எண்ணற்ற ஏவுகணைகளை தாக்கியது.

தெஹ்ரான்

சிரியா, குவைத் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது ஈரான் இன்று பதிலடி தாக்குதல்களை நடத்தியது.

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினர், பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

சமீபத்தில் காமேனியின் உடல் பலத்த பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது. 100 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வந்து, சுமுக உடன்பாடு ஏற்படுத்த அமெரிக்கா ஒருபுறம் முயற்சி செய்து வருகிறது. ஆனால், ஈரான் அதற்கு சில நிபந்தனைகளை விதிப்பதுடன், அமைதி பேச்சுவார்த்தைக்கு உடனடி தீர்வு காண்பதில் உடன்படாமல் இருந்து வருகிறது.

ராணுவ தளங்கள்

இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில், சிரியா, குவைத் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது ஈரான் இன்று பதிலடி தாக்குதல்களை நடத்தியது.

முதலில், நடந்த தாக்குதலின்போது, அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு கண்காணிப்பு ரேடார், பல்வேறு ஆயுத கிடங்குகள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடந்தது.

தொடர்ந்து, குவைத்தில் அமெரிக்க படைகள் தங்கியுள்ள ராணுவ தளத்தில் எண்ணற்ற ஏவுகணைகளை தாக்கியது. இதனால், பெரிய அளவில் தீ பரவியது. இதன்பின்னர் ஓமனில் உள்ள கனம் பகுதியில் அமெரிக்க வான் கண்காணிப்பு ரேடார் ஒன்றையும், சல்மா பீடபூமி பகுதியில் இருந்த கடற்படை கண்காணிப்பு ரேடார் ஒன்றையும் அழித்து விட்டோம் என்று ஈரான் தெரிவித்தது.