கராச்சி
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினர் கொல்லப்பட்டு உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள், தலைவர்கள், தளபதிகள் கொல்லப்பட்டனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்ற நிலை காணப்படுகிறது.
ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் சூழல் காணப்படுகிறது.
எனினும், நட்பு நாடுகளுக்கு ஆதரவாக அவர்களுடைய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்து வருகிறது. இதன்படி இந்தியா, ஜப்பான் நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த சூழலில் ஹார்மூஸ் ஜலசந்தியை கடக்க 20 பாகிஸ்தான் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதுபற்றி பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி இஷாக் தார் கூறும்போது, தினசரி 2 கப்பல்கள் என்ற விகிதத்தில் ஹார்மூஸ் ஜலசந்தியை எங்களுடைய கொடியுடன் கூடிய 20 கப்பல்கள் கடந்து செல்லும் என்று கூறினார். ஈரானின் இந்த முடிவு அமைதிக்கான அடையாளம் என்று கூறிய அவர், இந்த நடவடிக்கை, அந்த பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க உதவும் என்றும் கூறினார். இதனை வரவேற்கிறேன் என்றும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைக்கான அடையாளம் என்றும் அவர் கூறினார்.