தெஹ்ரான்,
சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் அந்நாட்டில் 3 ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோரை பலி வாங்கியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து உலகம் முழுவதும் 140க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிதீவிரமுடன் வைரஸ் பரவி வருகிறது. ஆண், பெண் பேதமின்றி உலகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பலி வாங்கியுள்ளதுடன், 1 லட்சத்து 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாததால் தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
சீனா தவிர்த்து ஈரான், இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது.
ஈரானில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 97 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 611 ஆக அதிகரித்திருந்தது. சுமார் 12,729 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
ஈரான் நாட்டில் மந்திரிகள் உள்பட சில முக்கிய பிரமுகர்கள் கொரோனா வைரசால் பலியான நிலையில், பல அரசியல் தலைவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் அங்கு பொதுமக்களுக்கு அதிக அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுவரை இல்லாத வகையில் ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இன்று ஒரே நாளில் 113 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 724 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று 13 ஆயிரத்து 900 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அந்நாட்டு சுகாதார அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி கியானவுஷ் ஜகான்பூர் தொலைக்காட்சி வழியே இன்று கூறும்பொழுது, அனைத்து பயணங்களையும் பொதுமக்கள் ரத்து செய்து விட்டு வீட்டிலேயே இருக்க வேண்டும். அதனால் வருகிற நாட்களில் முன்னேற்ற சூழல் ஏற்பட கூடும் என கூறியுள்ளார்.