Photo Credit: Reuters 
உலக செய்திகள்

அமெரிக்க போர்க்கப்பல் மீது பதிலடி தாக்குதல் நடத்திய ஈரான்: பதற்றம் அதிகரிப்பு

ஈரான் சரக்கு கப்பலை அமெர்க்க கடற்படை தாக்கியதாக டிரம்ப் கூறிய நிலையில் அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே போர் நடைபெற்று வந்தது. கடந்த 8-ம் தேதி இருதரப்பு இடையே போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டது. இந்த போர் நிறுத்தம் வரும் 22-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதனிடையே கடந்த 11, 12-ம் தேதிகளில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தலைமையிலான குழுக்கள் பேச்சுவார்த்தை நடத்தின. சுமார் 21 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதைத் தொடர்ந்து இருதரப்பு இடையே இஸ்லாமாபாத்தில் மீண்டும் அமைதிப்பேச்சுவார்த்தைக்கு திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், அமெரிக்காவும் ஈரானும் வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளதால் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்க ராணுவ கப்பல்கள் மீது ஈரான் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரான் சரக்கு கப்பலை அமெரிக்க கடற்படை தாக்கியதாக டிரம்ப் கூறிய நிலையில் அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.