Photo Credit: AP 
உலக செய்திகள்

ஓமன் அருகே சரக்கு கப்பல் மீது ஈரான் ராணுவம் துப்பாக்கி சூடு

ஓமனுக்கு வடகிழக்கே சுமார் 28 கி.மீ தொலைவில் ஒரு சரக்கு கப்பலை ஈரானின் புரட்சிகர காவல்படையின் படகு நெருங்கி வந்து தாக்குதல் நடத்தியது.

அமெரிக்கா–ஈரான் போரால் மத்திய கிழக்கில் பதற்றம் நீடித்து வருகிறது. இருநாடுகளுக்கும் இடையேயான அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. 2-வது சுற்று பேச்சுவார்த்தையை நடத்தி விரைவில் அமைதியை எட்ட பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது.இதற்கிடையே, அமைதி உடன்படிக்கைக்கு வராத ஈரானை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்தும் வகையில், ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா போர்க்கப்பல்கள் முற்றுகையிட்டுள்ளன. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

அந்த ஜலசந்தியை கடக்கும் கப்பல்கள் ஈரானிடம் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை மீறும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓமன் அருகே ஒரு சரக்கு கப்பல் மீது ஈரான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதுதொடர்பாக கடல்சார் வர்த்தக நடவடிக்கை அமைப்பு கூறும்போது, ஓமனுக்கு வடகிழக்கே சுமார் 28 கி.மீ தொலைவில் ஒரு சரக்கு கப்பலை ஈரானின் புரட்சிகர காவல்படையின் படகு நெருங்கி வந்து தாக்குதல் நடத்தியது. அந்த கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் கப்பலின் ஒரு பகுதி கடும் சேதம் அடைந்தது என்று தெரிவித்தது.

இச்சம்பவம் தொடர்பாக ஈரான் அரசின் செய்தி நிறுவனமான தஸ்னிம் கூறும்போது, ஈரான் ராணுவம் விடுத்த எச்சரிக்கைகளைப் புறக்கணித்த ஒரு கப்பல் மீது ராணுவம் கடல்சார் சட்டத்தை அமல்படுத்தியது என்று தெரிவித்தது