உலக செய்திகள்

சதாம் உசேனுக்கு வலதுகரமாக செயல்பட்ட ராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை

சாதுன் சப்ரி அல்-கைசியை கடந்த ஆண்டு ஈராக் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

பாக்தாத்,

ஈராக்கை நீண்ட காலம் ஆட்சி செய்த சதாம் உசேனின் ஆட்சிக் காலத்தில், அவருக்கு மிகவும் நெருக்கமான பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் சாதுன் சப்ரி அல்-கைசி. ராணுவ உயர் அதி காரி அந்தஸ்தில் இருந்த இவர். அப்போது நடந்த பல முக்கிய கொலைகளுக்கு மூளையாகச் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த 1980-ம் ஆண்டு ஈராக்கின் மிக முக்கியமான ஷியா மதகுருவான முகமது பாகிர் அல்-சத்ர் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இதில் அல்-கைசிக்கு நேரடித் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த அவரை கடந்த ஆண்டு ஈராக் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, "மனிதநேயத்திற்கு எதிரான கொடும் குற்றங்களை" இழைத்ததாக கூறி மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் தூக்கிலிடப் பட்டதாக ஈராக் தேசிய பாதுகாப்பு அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.