உலக செய்திகள்

ஈராக்கில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு; 5 பேர் பலி

ஈராக்கில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 5 பேர் பலியாயினர்.

தினத்தந்தி

பாக்தாத்,

ஈராக்கில் ஊழல் மற்றும் வேலையின்மை அதிகரித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். கடந்த மாதம் 1-ந்தேதி தொடங்கி நடந்து வரும் இந்த தொடர் போராட்டத்தில் இதுவரை 250-க்கும் அதிகமானோர் பலியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அரசு இதுவரை முறையாக அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், தலைநகர் பாக்தாத்தில் இருந்து 100 கி.மீ. தொலைவில் இருக்கும் கர்பாலா நகரில் உள்ள ஈரான் நாட்டின் தூதரகத்தின் முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்பாலா நகர் சுதந்திரம் பெற்றுவிட்டதாகவும், ஈரான் தூதரகம் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழங்கினர்.

அதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் தூதரகத்தின் நுழைவாயிலில் டயர்களை தீவைத்து கொளுத்தினர். மேலும் தூதரகத்தின் சுற்று சுவர் மீது கற்களையும், வெடி பொருட்களையும் வீசி எறிந்தனர். இதையடுத்து போராட்டக்காரர்களை விரட்டியடிக்க பாதுகாப்பு படைவீரர்கள் தடியடி நடத்தியதோடு, கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர்.

ஆனாலும் நிலைமை கட்டுக்குள் வராததால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் போராட்டக்காரர்கள் 5 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

இதற்கிடையே பாக்தாத்தில் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் அமைந்துள்ள பசுமை மண்டலம் பகுதிக்கு செல்லும் மேம்பாலத்தில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டு போக்குவரத்தை முடக்கினர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு