காத்மண்டு,
நேபாள பெரு வெள்ளத்திற்கு சீனா காரணமா? என்பது குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கரமான திடீர் வெள்ளப்பெருக்கிற்கு இமயமலைப் பகுதியில் சீனா மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகளே காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த கட்டுமானங்களால் தான் பனிச்சரிவு ஏற்பட்டு பெரும் விபத்து நடந்ததாக 'நேபாள் கரஸ்பாண்டன்ஸ்' குற்றம் சாட்டியுள்ளது.
சீனப் பகுதியில் உள்ள இமயமலையில் உயரமான பனிப்பாறைகள் நிறைந்த பகுதிகளில் 'ஜியாவோகாங்' குடியிருப்புகளை சீனா அமைத்து வருகிறது. மலைகளின் நுண்ணிய தன்மையைச் சிதைக்கும் இந்தக் கட்டுமானங்களால்தான், சீனா-நேபாள எல்லையில் ஆண்டுதோறும் பனிச்சரிவுகள் ஏற்பட்டு, அது நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்காக மாறுகிறது.
தற்போதைய பயங்கர வெள்ளப்பெருக்கு, ஆக்கிரமிக்கப்பட்ட திபெத்தில் உள்ள கைரோங் நகருக்கு அருகே ஏற்பட்ட பனிச்சரிவு தான் காரணமாக சொல்லப்படுகிறது. அங்கு, மலைகளைக் குடைந்து புதிய நகரம் அமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, திரிசூலி நதியின் இயற்கையான நீரோட்டப் பாதையை மறித்து, அதன் மீதே இந்த நகர்ப்புற கட்டுமானங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ரசுவா எல்லையில் சீனா அமைத்துள்ள கைரோங் துறைமுகம், வேண்டுமென்றே 2 நதிகள் இணையும் இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நேபாள எல்லையை நோக்கிப் பாயும் நதி நீரின் வேகம் பல மடங்கு அதிகரிக்கிறது. இது ஒரு திட்டமிட்ட சூழலியல் பேரழிவு மட்டுமல்ல, மிகவும் கொடூரமான செயலும் ஆகும்.
பனிச்சிகரங்களில் உள்ள மிக நுண்ணிய மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய சூழலியல் அமைப்பை சீரழிப்பதன் விளைவாக, நேபாளம் ஒவ்வொரு ஆண்டும் பெரும் வெள்ளத்தைச் சந்தித்து வருகிறது. இதனால் நேபாள மக்களுக்குத் தொடர்ச்சியாகப் பெரும் உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு வருகிறது.
இமயமலைப் பகுதி முழுவதும் சூழலியலை அழித்து, ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தி வரும் சீனாவின் இந்த ஆபத்தான நடவடிக்கை குறித்து, நேபாளப் பிரதமர் உடனடியாக சீனாவிடம் கடுமையான முறையில் கேள்வி எழுப்ப வேண்டும் என்று நேபாள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.