இஸ்லாமாபாத்,
இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் குல்பூஷண் ஜாதவ். இவர் தங்கள் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. குல்பூஷண் ஜாதவ்வை காப்பாற்றுவது தொடர்பாக பாகிஸ்தானில் எடுக்கப்படும் நடவடிக்கையில் பலன் இருக்காது என கருதப்பட்ட நிலையில் இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடி தற்காலிக தடையை பெற்றது. இவ்விவகாரம் தொடர்பாக இன்று நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது.
இந்திய கடற்படையில் இருந்து ஓய்வு பெற்று ஈரானில் பணியாற்றிய குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் கடத்தியது என்பதே இந்தியாவின் தொடக்கம் முதலான வாதமாக இருந்து வருகிறது.
ஈரானில் இருந்து குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் ராணுவத்திற்கு மிகவும் நெருக்கமான பயங்கரவாத இயக்கம் கடத்தி உள்ளது.
ஈரானின் சபாகாரில் இருந்து குல்பூஷண் ஜாதவை ஜெய்ஷ்-உல்-அடல் என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த முல்லாக் ஒமர் இரானி கடத்தி உள்ளான் என இந்திய பாதுகாப்பு உயர்மட்ட தகவல்கள் வெளியாகியது. இந்த பயங்கரவாத இயக்கம் ஈரான் மற்றும் பக்ரைனில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரகத்திடம் இருந்து பணம் வாங்கி உள்ளது. இந்த பயங்கரவாத இயக்கம் மும்பை தாக்குதல் சூத்திரதாரியான ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு கொண்டது எனவும் தெரிகிறது.
இந்நிலையில் ஈரானில் இருந்து குல்பூஷண் ஜாதவை கடத்தியவனுக்கு பாகிஸ்தான் உளவுத்துறை பணம் வழங்கியது என தகவல் வெளியாகி உள்ளது.
பலூச் ஆர்வலர் மாமா காதிர் பாலோச் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்து உள்ள பேட்டியில், குல்பூஷண் ஜாவத் ஈரானில் இருந்து முல்லா ஒமரால் கடத்தப்பட்டு உள்ளார். முல்லா ஒமர் இரானி பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.க்கு பணியாற்றி வருகிறான். பலூச் மக்களை கடத்துவது மற்றும் கொலை செய்வதில் தொடர்பு உள்ளவன். பல்வேறு கொலைகளில் தொடர்பு உடையவன். பணத்திற்காக இதனை செய்கிறான். அவனுக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கி ஐ.எஸ்.ஐ. தனக்கு தேவையான பணியை நிறைவேற்றி வருகிறது என கூறிஉள்ளார்.