தெஹ்ரான்
அமெரிக்கா-இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றுபட வேண்டும் என்று ஈரான் தலைவர் காமேனி அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி திடீரென வான்வழியாக தாக்குதலை நடத்தின. இதில் ஈரானின் உச்சபட்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி, அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய அதிகாரிகள் என ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள்.
இதன்பின்னர், ஈரானின் புதிய உச்ச தலைவராக அயதுல்லா அலி காமேனியின் மகன் அயதுல்லா மொஜ்தபா காமேனி பொறுப்பேற்றுள்ளார். அலி காமேனியின் உடல் கடந்த ஜூலையில் அடக்கம் செய்யப்பட்டது. 6 நாட்கள் நடைபெற்ற இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளுக்குப்பின் நடந்த அயதுல்லா அலியின் உடல் அடக்கம் நிகழ்ச்சியில் 4.3 கோடி பேர் பங்கேற்றனர் என ஈரான் அரசு தெரிவித்தது. எனினும், அமெரிக்கா அளித்த நெருக்கடியால் காமேனி இறுதிச்சடங்கை 13 நாடுகள் புறக்கணித்தன.
காமேனி இறுதிச்சடங்கு நிகழ்வில் பங்கேற்க வேண்டாம் என்று அந்தந்த நாடுகளிடம் கூறும்படியும், அப்படி பங்கேற்பது அமெரிக்காவுடனான இருதரப்பு உறவுகளில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் வகையிலான எதிரான செயலாக கவனத்தில் கொள்ளப்படும் என்றும் தூதரகங்கள் மற்றும் தூதர்களின் வழியே அமெரிக்கா தெரிவித்திருந்தது.
இதனால், ஐரோப்பிய நாடுகள், 5 ஆப்பிரிக்க நாடுகள், பெர்சிய வளைகுடாவை சேர்ந்த 2 அரபு நாடுகள் மற்றும் 2 பெரிய கிழக்காசிய நாடுகள் ஆகியவை காமேனி இறுதிச்சடங்கில் பங்கேற்காமல் தவிர்த்தன. இதனை ஈரான் ஊடகம் உறுதிப்படுத்தியது.
அயதுல்லா அலி காமேனியின் கொலைக்கு அமெரிக்கா, இஸ்ரேலை பழி தீர்ப்போம் என்று ஈரான் உச்சபட்ச தலைவர் மற்றும் அலி காமேனியின் மகனான மொஜ்தபா காமேனி மிரட்டல் விடுத்துள்ளார்.
போர் தொடங்கி 6 மாதங்கள் ஆன பின்னரும், ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா காமேனி இன்னும் பொதுவெளியில் தோன்றவில்லை. இந்நிலையில், அவர் வெளியிட்ட செய்தியில், அமெரிக்கா-இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றுபட வேண்டும். முஸ்லிம் நாடுகள் தங்களுடைய உண்மையான எதிரியை அறிந்து கொள்ள வேண்டும். எதிரியின் திட்டங்களை புரிந்து கொண்டு, அதனை எதிர்த்து போராட வேண்டும் என கூறியுள்ளார்.
அமெரிக்காவும், இஸ்ரேலும் இஸ்லாமிய நாடுகளின் எதிரிகள் என கூறிய அவர், அந்த நாடுகளுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டும் என்று கூறியுள்ளார். மத தலைவர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் இவற்றை வெளிப்படுத்தி இருக்கிறார்.