டெல் அவிவ்
ஈரானின் விண்வெளி கழகம் மற்றும் அந்நாட்டின் பல்வேறு வான் பாதுகாப்பு சாதன உற்பத்தி தளங்களை இஸ்ரேல் விமான படை இன்று தாக்கியுள்ளது.
இதுபற்றி இஸ்ரேல் விமான படை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ஈரான் விண்வெளி கழகத்தின் முதன்மையான ஆய்வு மையம் ஒன்று மற்றும் ஒரு வான் பாதுகாப்பு சாதன தயாரிப்பு ஆலை ஒன்றை தாக்கினோம்.
அந்த ஆய்வு மையத்தில், ராணுவ செயற்கைக்கோள்களை உருவாக்குவது, நுண்ணறிவு தரவு உள்ளிட்ட ஆராய்ச்சி பணிகளுக்கான முக்கிய ஆய்வகங்கள் இருந்தன. மத்திய கிழக்கு முழுவதும் உள்ள இலக்குகள் மீது தாக்குதலை நடத்துவதற்கான பணிக்கான ஆய்வகங்களும் இருந்தன.
இதுதவிர, ஒரு முக்கிய ஆலை உள்பட ஈரானின் பயங்கரவாத ஆட்சியின் பல்வேறு வான் பாதுகாப்பு சாதனங்களுக்கான உற்பத்தி ஆலைகள் தாக்கி அழிக்கப்பட்டன என தெரிவித்து உள்ளது.
இதற்கு முன் இன்று மாலை இஸ்ரேல் கூறும்போது, ஈரானில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டன. அவற்றை நாங்கள் அடையாளம் கண்டோம். எங்களுடைய பாதுகாப்பு சாதனங்கள் இடைமறித்து, தாக்கி அவற்றின் அச்சுறுத்தலை முறியடித்தன என தெரிவித்தது. மக்கள் தங்களுடைய உயிரை பாதுகாத்து கொள்ள அரசின் அறிவுரைகளை பொறுப்புடன் பின்பற்றும்படியும் அப்போது கேட்டு கொண்டது.