உலக செய்திகள்

ஈரான் போர் தொடர்ந்து நீடிக்க இஸ்ரேல் சதி; அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு

போர் ஆனது காலவரையின்றி தொடர்ந்து நீடிக்க இஸ்ரேல் அரசில் உள்ள சிலர் விரும்புகின்றனர் என அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளது.

வாஷிங்டன் டி.சி.

ஈரானுடனான போர் தொடர வேண்டும் என இஸ்ரேல் அரசில் சிலர் விரும்புகின்றனர் என்று அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளது.

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலினார்கள்.

ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்தது.

காமேனியின் உடல் அடக்கம்

இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டது. சமீபத்தில் காமேனியின் உடல் பலத்த பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது. 100 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வந்து, சுமுக உடன்பாடு ஏற்படுத்த அமெரிக்கா ஒருபுறம் முயற்சி செய்து வருகிறது.

ஆனால், ஈரான் அதற்கு சில நிபந்தனைகளை விதிப்பதுடன், அமைதி பேச்சுவார்த்தைக்கு உடனடி தீர்வு காண்பதில் உடன்படாமல் இருந்து வருகிறது.

ஜே.டி. வான்ஸ் பேட்டி

இந்த சூழலில், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், சமூக ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், ஈரானுடன் நடந்து வரும் அமைதி பேச்சுவார்த்தையை தடுக்கும் வகையிலும், போர் ஆனது காலவரையின்றி தொடர்ந்து நீடிக்கவும் இஸ்ரேல் அரசில் உள்ள சிலர் விரும்புகின்றனர்.

சில குறிப்பிட்ட சக்திகள் அதற்கேற்ப திட்டமிட்டு செயல்படவும் செய்கின்றன என பகிரங்க குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார். அமெரிக்கர்களின் எண்ணங்களை போருக்கு ஆதரவாக திசை திருப்பும் வகையில், திரித்தும், மாற்றவும் முயற்சித்து வருகின்றனர்.

ஆன்லைனில் தாக்கம்

சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு அது எங்களுக்கு தெரிகிறது. அதற்கு இஸ்ரேல் ரகசியமாக நிதியுதவி அளித்து வருகிறது என்றும் பேசியுள்ளார். இந்த நிதியை பெற்றுக்கொண்டு நேர்மையற்ற வகையில், சிலர், ஆன்லைன் வழியே என்னையே தாக்கி பேசி வருகின்றனர்.

ஆனால், அமெரிக்க மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதனையே நான் செய்ய போகிறேன். அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையிலேயே நான் செயல்பட போகிறேன் என்று கூறியுள்ளார். அந்த வகையில், ரூ.433 கோடிக்கும் கூடுதலாக நிதி செலவிடப்பட்டு, ஆன்லைனில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் தகவல்கள் பரப்பப்படுகின்றன என கூறப்படுகிறது.