டெல் அவிவ்
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக நேற்று முன்தினம் கடுமையாக தாக்கியது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர்.
இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது. இந்த தொடக்க கட்ட தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட மூத்த ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டு விட்டனர் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு இன்று இஸ்ரேலை தாக்கியது. இதற்கு பதிலடியாக, இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த சம்பவத்தில், 31 பேர் பலியாகி உள்ளனர் என லெபனான் சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்து உள்ளது. இதுதவிர 149 பேர் காயம் அடைந்து உள்ளனர். பலியானவர்களில் 3-ல் 2 பங்கு பேர் தெற்கு லெபனானை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த தாக்குதல் மற்றும் பதிலடி சம்பவங்களால் மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து போர் தொடர கூடிய சூழல் காணப்படுகிறது.