காசா
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 4 பேர் உடல் சிதறி பலியாகி உள்ளனர்.
ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் ஆயுதங்களுடன் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். ஆண்டுதோறும் நடத்தப்படும் இசை கச்சேரி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்ததிருந்த இளம்பெண்கள், ஆண்கள் என 1,100-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
இதுதவிர, இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்தி சென்றனர். எனினும், பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையில் மீட்ட இஸ்ரேல் தொடர்ந்து அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த போரில் காசா முனையில் இதுவரை 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1.74 லட்சத்திற்கும் கூடுதலானோர் காயமடைந்து உள்ளனர்.
இந்த சூழலில், காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர். காசா முனையில் பெய்த் லஹியா என்ற பகுதியில் இன்று அதிகாலை இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், வீடு ஒன்று சேதமடைந்தது. அந்த வீட்டில் இருந்த 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்திலுள்ள 4 பேர் உடல் சிதறி பலியாகி உள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி இஸ்ரேல் ராணுவத்திடம் நிருபர்கள் கேட்டபோது, இதனை நாங்கள் ஆய்வு செய்வோம் என்று மட்டும் பதிலாக தெரிவித்தனர்.
எனினும், பாலஸ்தீனிய மருத்துவமனை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் இந்த படுகொலையை உறுதிப்படுத்தி உள்ளன. இதன்படி, அகமது என்பவரின் குடும்பத்திலுள்ள 4 பேரின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு மீட்கப்பட்டு உள்ளன.
அவர்களில் 12 மற்றும் 8 வயதுடைய குழந்தைகளும் அடங்குவர். காசா முனை பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது என்று பாலஸ்தீனிய பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்தது. ஹமாஸ் அமைப்பு எல்லா ஆயுதங்களையும் விடுத்து சரணடையும் வரை போரில் இருந்து பின்வாங்க போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறினார்.