உலக செய்திகள்

நெதன்யாகுவை முட்டாள் என கூறியது உண்மைதான்: டிரம்ப்

இந்த சூழலில், லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.

டெல் அவிவ்

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானை கடுமையாக தாக்கின. வளைகுடா நாடுகளில் உள்ள தளங்களை பயன்படுத்தியும் தாக்குதல் நடந்தது என கூறப்படுகிறது. இதனால், குவைத், கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகள் மீதும் கடந்த காலங்களில் ஈரான் தரப்பில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது.

ஈரான் நாட்டுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனானில் இருந்து அதன் உறுப்பினர்கள் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், லெபனானை இஸ்ரேல் தாக்கியது. அந்நாட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் உள்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

ஆனால், போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்று லெபனான் கோரிக்கை வைத்தது. இந்த சூழலில், வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியுள்ளது என கூறப்படுகிறது. இதனை குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ள இஸ்ரேல், வடக்கு இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதலை ஹிஸ்புல்லா நிறுத்த வேண்டும். அப்படி இல்லையெனில், பெய்ரூட்டை இலக்காக கொண்டு எங்களுடைய படைகள் தாக்குதல் நடத்தும் என கடுமையாக கூறினார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்குள் இஸ்ரேல் படைகள் நுழையாது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். இரு நாடுகளும், பரஸ்பர பகைமைகளை தவிர்த்து விடும் என்றும் இருதரப்பும் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்வார்கள் என்றும் கூறினார்.

இந்த சூழலில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அளித்துள்ள விளக்கத்தில், டிரம்ப்புடன் நான் பேசினேன். அப்போது, எங்களுடைய நகரங்கள் மீதும், குடிமக்கள் மீதும் நடத்தும் தாக்குதலை ஹிஸ்புல்லா நிறுத்தவில்லை என்றால், பெய்ரூட்டில் உள்ள பயங்கரவாத நிலைகளை இஸ்ரேல் தாக்கும். இந்த நிலைப்பாட்டில் மாற்றமிருக்காது என கூறினேன் என தெரிவித்து உள்ளார். இதனால், மீண்டும் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற பதற்ற நிலை எழுந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக நெதன்யாகுவை தொலைபேசி வழியே அழைத்து டிரம்ப் நேற்று பேசியுள்ளார். அப்போது அவரை முட்டாள் என்று டிரம்ப் திட்டியுள்ளார் என தகவல் வெளியானது. இதனை வெளிப்படையாக டிரம்ப் ஒப்பு கொண்டுள்ளார். நெதன்யாகு சிறிது குழம்பி போய் விட்டார் என்றும் கூறினார்.

எனினும், நெதன்யாகுவுடனான நட்புறவு தொடர்கிறது என்றும் அது உறுதியாகவே உள்ளது என்றும் அவர் வலியுறுத்தி கூறினார். ஏனெனில் இருவரும் போர்க்கால தலைவர்கள். நாங்கள் இருவரும் இணைந்து நன்றாக பணியாற்றி இருக்கிறோம். அவரை நான் நிறைய ரசிக்கிறேன். அவருடன் நன்றாக பணியாற்றியுள்ளேன் என்று பேசியுள்ளார்.