டோக்கியோ,
உலக விண்வெளிச் சந்தையில் செலவை குறைப்பதற்காக தயாரிக்கப்பட்ட ஜப்பானின் புதிய மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட், தனது முதலாவது பரிசோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது.
உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சி என்பது நாளுக்கு நாள் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. குறிப்பாக, செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த ஆகும் செலவைக் குறைப்பதுதான் தற்போதைய உலக நாடுகளின் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
இந்த போட்டியில், அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மற்றும் சீனா ஆகியவை மறுபயன்பாட்டு ராக்கெட் தொழில்நுட்பத்தில் ஏற்கனவே முன்னிலையில் உள்ளன. இந்த அசுரப் போட்டிக்கு மத்தியில், ஆசியாவின் முன்னணி விண்வெளி வல்லரசான ஜப்பானும் களமிறங்கியுள்ளது.
விண்வெளி சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டவும், ராக்கெட் ஏவுவதற்கான செலவைக் கணிசமாகக் குறைக்கவும் ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'ஜாக்ஸா' தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தது. அதன் பலனாக, 'மிட்சுபிஷி' நிறுவனத்துடன் இணைந்து 'ஆர்வி-எக்ஸ்' என்ற அதிநவீன மறுபயன்பாட்டு ராக்கெட்டை ஜப்பான் உருவாக்கியது.
7.3 மீட்டர் நீளமும், 4 பிரத்யேக அதிர்வுதாங்கி கால்களையும் கொண்ட இந்த ராக்கெட்டின் முதல் சோதனை ஓட்டம், வடகிழக்கு ஜப்பானில் உள்ள நோஷிரோ சோதனை மையத்தில் நேற்று நடைபெற்றது. அனைவரும் எதிர்பார்த்த அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிமிடம் வந்தது.
'ஆர்வி - எக்ஸ்' ராக்கெட் விண்ணை நோக்கிச் சீறிப் பாய்ந்ததை விண்வெளி ஆர்வலர்கள் நேரலையில் பார்த்தனர். ஒரு நிமிடத்துக்கும் குறைவான அந்த பயணத்தில், காற்றில் குறிப்பிட்ட தூரம் வரை மிதந்து, பின்னர் துல்லியமாகத் தான் புறப்பட்ட இடத்திலேயே செங்குத்தாக வந்து பத்திரமாகத் தரையிறங்கி யது.
இந்த அசாத்திய வெற்றியின் மூலம், தனது அடுத்த தலைமுறை 'ஹெச்3' ரக ராக்கெட்டுகளின் செலவைக் குறைத்து, உலக விண்வெளிச் சந்தையில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இணையாகப் போட்டியிட ஜப்பான் தயாராகி விட்டது. அடுத்தகட்டமாக, இந்த ராக்கெட்டை 100 மீட்டர் உயரத்திற்கு அனுப்பி சோதனை செய்ய பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியுடன் இணைந்து ஜப்பான் திட்டமிட்டுள்ளது.