உலக செய்திகள்

உலகையே கலங்க வைத்த பஞ்ச் குரங்கிற்கு கிடைத்த புது நட்பு

பஞ்ச் குன், செல்லும் இடமெல்லாம் அந்த பொம்மை குரங்கையையும் உடன் இழுத்து சென்றது.

டோக்கியோ,

கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் இச்சிகாவா சிட்டி உயிரியல் பூங்காவில் பிறந்த மக்காக் வகை குரங்கு குட்டி ஒன்றை அதன் தாய் சேர்த்து கொள்ளாமல் விரட்டி விரட்டி வந்தது.

மக்காக் வகை குரங்குகள் தன் குட்டிகளை சில நேரம் கண்டுக்கொள்ளாமல் இருப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் மாதங்கள் கடந்தும் இந்த நிராகரிப்பு தொடர்ந்தது.

இதனையடுத்து அந்த குட்டியை பராமரித்து வந்த பூங்கா ஊழியர்கள் அதற்கு பஞ்ச் குன் என்று பெயரிட்டு அதன் தனிமையை போக்க ஆரஞ்சு நிறத்தில் ஓரங்குட்டான் பொம்மை ஒன்றை பரிசாக கொடுத்திருந்தனர்.

அதை தாயாக எண்ணிக்கொண்ட பஞ்ச் குன், செல்லும் இடமெல்லாம் அந்த குரங்கு பொம்மையையும் உடன் இழுத்து சென்றது. அந்த பொம்மையை கட்டியணைப்பதும், அதன் மீது படுத்து உறங்குவதும் என தாய்ப்பாசத்திற்கு அல்லாடி படியே திரிந்து வந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த காட்சிகள் காண்போர் இதயத்தை ஒரு நொடி கண்கலங்க வைத்தது. பலர் இந்த குட்டி குரங்கு பஞ்ச் குன்னை தத்தெடுக்கவும் விருப்பம் தெரிவித்தனர்.

இந்தநிலையில் 8 மாதங்களுக்கு பிறகு பஞ்ச் குன் அதன் கூட்டத்தோடு இணைந்துள்ளது. தனிமையில் வாடிய ‘பஞ்ச் குன்' என்ற குரங்கு தற்போது 'மோமோ-சான்' என்ற பெண் குரங்குடன் நட்பு கொண்டுள்ளதாக உயிரியல் பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக 'பஞ்ச்' குரங்கு, பொம்மையை கட்டிக்கொண்டு தனிமையில் நடனமாடிய வீடியோ இணையத்தை ஆக்கிரமித்த நிலையில் தற்போது அந்த குரங்கிற்கு நட்பு கிடைத்துள்ளது.