ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு நாம் நினைத்து பார்க்க முடியாத பல முன்னேற்றங்கள் அடைந்துக்கொண்டு இருக்கிறது. கடந்த நூற்றாண்டை கம்ப்யூட்டர் யுகம் என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது ஏஐ யுகம் என சொல்லும் காலம் வந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு அனைத்து இடங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பல தொழில்நுட்பங்கள் செயற்கை நுண்ணறிவை கொண்டு இயக்கப்படுவதால், பலரின் வேலைகளும் கேள்விக்குறியாகி உள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வில், அடுத்த 10 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு (AI) காரணமாக 47 சதவீத வேலைகள் அமெரிக்காவில் குறைக்கப்படலாம் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளிலும் இந்த நிலை ஏற்படலாம் என்று கணித்துள்ளனர். குறிப்பாக ஐடி துறையில் அதிக அளவு வேலை இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களும் ஆட்குறைப்பை மேற்கொண்டு வருகின்றன.
அமேசான், ஆரக்கிள் போன்ற நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில், டெக் உலகில் டாப் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கு மெட்டாவும் ஆட்குறைப்பை கையில் எடுத்துள்ளது. தனது மொத்த பணியாளர்களில் சுமார் 10% பேரை, அதாவது 8,000க்கும் மேற்பட்டோரைக் பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு தொழில்நுட்ப துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நிறுவனம் வெளியிட்ட விளக்கத்தில், செயற்கை நுண்ணறிவுதுறையில் முதலீடுகள் மற்றும் செலவினங்கள் அதிகரித்து வருவதால், நிறுவனத்தின் செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.