வாஷிங்டன்
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1 லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.
இதற்கிடையில், கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக ரஷியா நேற்று அங்கீகரித்தது. தற்போது அந்த பகுதிகளில் ரஷியா தனது படைகளை நிலைநிறுத்தியுள்ளது. இந்த நிகழ்வுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. உக்ரைனின் கிளர்ச்சிப் பகுதிகளை ரஷியா அங்கீகரித்ததைத் தொடர்ந்து, உக்ரைனில் ராணுவ பலத்தைப் பயன்படுத்துவதற்கு அதிபர் விளாடிமிர் புதினுக்கு அனுமதி வழங்க ரஷிய நாடாளுமன்றம் வாக்களித்ததைத் தொடர்ந்து உக்ரைனில் இருந்து ரஷியா தனது தூதரக அதிகாரிகளை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் முந்தைய தங்கள் நடவடிக்கைகளுக்காக ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர், ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள், மேற்கத்திய நிதியுதவி பெறுவதில் இருந்து அவர்கள் துண்டிக்கப்படுவார்கள். ரஷ்யாவின் உயரதிகாரிகள் மீதும் பொருளாதார தடைகளை விதிப்போம். வி.இ.பி (VEB) மற்றும் ரஷ்யாவின் இராணுவ வங்கி ஆகிய இரண்டு பெரிய நிதி நிறுவனங்களின் மீது நாங்கள் தடைகளை அமல்படுத்துகிறோம்.
உக்ரைனுக்கு அதிகளவில் தற்காப்புக்கான உதவிகளை அமெரிக்கா வழங்கும். விளாடிமிர் புதின் பலப் பிரதேசங்களை வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பதற்கான ஒரு காரணத்தை உருவாக்குகிறார், என் பார்வையில்... அவர் தாக்குதல் நடத்த மேலும் ஒரு காரணத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார். இது உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஆரம்பம். புதின் தனது அண்டை நாடுகளுக்கு சொந்தமான பிரதேசத்தில் புதிய 'நாடுகளை' அறிவிக்கும் உரிமையை இறைவனின் பெயரில் யார் அவருக்கு தருவதாக நினைக்கிறார்..? என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கேள்வி எழுப்பினார்.